Kumar
Kumar
Friday, December 16, 2016
தடைநீக்கி மணம் புரிவிப்பார் செவ்வாய் : பூவிருந்தவல்லி
நவகிரகங்களுள் செவ்வாயை பூமிகாரகன் என்பர். வீடு, நிலம், சகோதரர் நிலை, நிர்வாகம், பூர்வீக சொத்து, ரத்தம், எலும்பு, காவல், ராணுவ வேலை, திருமணம், குழந்தைப்பேறு என்று பல விஷயங்களை செவ்வாய்தான் தீர்மானிக்கிறார். ஒருவருடைய சொந்த ஜாதகத்தில் செவ்வாய் சரியாக அமையாவிடின் மேற்கண் விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படும். சென்னை பூவிருந்தவல்லியில் தையல்நாயகி அம்மை உடனுறை வைத்தியநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்திரனுடைய சாபத்தையும், அதனால் ஏற்பட்ட அவனுடைய சரும நோயையும் தீர்த்த தலம் இது. அங்காரகன் வாயுரூபமாக, தாளிப்பனையின் கீழிருந்த சிவனை வழிபட்டான். இங்குள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி முழு வலிமை பெற்றான். கிழக்கு வாயிலில் சிறிய அளவு ராஜகோபுரம், எதிரில் மங்கள தீர்த்தம். கோயிலினுள் விழாக் காலங்களில் சுவாமி எழுந்தருளும் அழகிய மேடை. இங்கு சனிபகவான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு நேரே கருவறைக்குள் வைத்தியநாதர் தண்ணிலவாக தரிசனமளிக்கிறார். தையல்நாயகி அம்மை தனிச் சந்நதியில் அருள் வெள்ளம் பொங்க காட்சியளிக்கிறாள். கருவறையின் வலதுபுறத்தில் மோதகம் தாங்கிய விநாயகப் பெருமான், இடதுபுறம் அங்காரகன் சந்நதி. தாளிப்பனையின் கீழே சிறு அங்காரகன் அருவமாக பூஜிக்கும் விதமாக சிவலிங்கமும், திருவடிகளும் உள்ளன. செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளால் செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபட்டவர்கள் விரைவில் பயனடைகின்றனர். மணமாலைேயாடு வந்து நன்றி தெரிவிக்கின்றனர். மாசி மாதத்தில் 21, 22, 23, 24, 25 தேதிகளில் கிழக்கு கோபுரம் வழியே சூரியனின் செம்பொற் கிரணங்கள் இறைவன் திருமேனியின் மீது பொழிவது கண்கொள்ளாக் காட்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment