Kumar

Kumar

Friday, December 16, 2016

சாப தோஷங்கள் நீக்கும் சந்திரன் : சோமங்கலம் நவகிரகங்களில் சந்திரனை மனோகாரகன் என்பார்கள். மனதை தீர்மானிப்பதில் சந்திரனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஜாதகத்தில் சந்திரன் சரியில்லை என்றால் அல்லது அசுப கிரக சேர்க்கை பெற்றிருந்தால் மன உளைச்சல், மனநிலை பாதிப்பு என ஏற்படும். சந்திரனை தரிசித்தால் மனோபலம் அதிகமாகும். தட்சன் தன் இருபத்தேழு பெண்களை சந்திரனுக்கு மணமுடித்தான். ஆனால், சந்திரன் ரோகிணியை மட்டும் குளுமையாய்ப் பார்த்தான். மற்ற பெண்களை குறையோடு நோக்கினான். அதனால் அவர்கள் மனம் குன்றிப் போனார்கள். தந்தையிடம் வந்து முறையிட்டார்கள். ‘‘உனக்கு செருக்கை அளிக்கும் உன் அழகு குலையட்டும். உன் சக்தி, உன் பிரகாசம் மங்கட்டும்’’ என்று தட்சன் கடுமையாய் சந்திரனை சபித்தான். சந்திரன் ஒளிமங்கி, தேய்ந்து கருமையானான். உடனே தட்சனின் பாதம் பணிந்தான். ‘‘தொண்டை மண்டலத்தில் சுயம்புவாய் நிற்கும் சிவனை நோக்கி தவம் செய்; இந்த சாபம் தீரலாம்’’ என்று ஆறுதலளித்தான் தட்சன். அப்படியே சந்திரன் சிவனை பூஜிக்க, சிவன் காட்சி தந்து, ‘‘தட்சனின் சாபத்தை முழுமையாக நீக்க முடியாது. ஆனாலும் நீ முற்றிலும் மறையாமல், தேய்ந்தும், மறைந்தும் ஒரு வட்ட சுழற்சியில் வா. அது உலக உயிர்களுக்கு நன்மை புரியட்டும்’’ என்றார். இப்படி சந்திரன் என்ற சோமன் பூஜித்து சாபநிவர்த்தி பெற்ற தலமே சோமங்கலம். அதனாலேயே இங்குள்ள ஈசன், சோமநாதர் என்றானார். சந்திரனுக்கு இங்கு தனிச் சந்நதி உள்ளது. அம்பிகை காமாட்சி. இங்கு ஈசன் சோமநாதரையும், சந்திரனையும் தரிசித்தால் மனம் உறுதி பெறும்; தடுமாற்றங்கள் நீங்கும்; சாப தோஷங்கள் விலகும். குலோத்துங்கச்சோழன் கஜபிருஷ்ட விமான அமைப்போடு அமைத்த அற்புதமான கோயில் இது.

No comments:

Post a Comment